

சென்னை: தமிழகத்தை வறுமை இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பினை வழங்கக்கூடிய மாநிலமாகவும், 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றுவதற்குத் தேவையான சமூக பொருளாதாரம் மற்றும் மனித வள முதலீடுகளை மேற்கொள்வதற்கு தவெக அரசு உறுதிபூண்டுள்ளது என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான(2026-27) பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, நிதியமைச்சர் மரிய வில்சன் உரை நிகழ்த்தி வருகிறார். நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில், “முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே பல துறைகளில் கனிசமான முன்னேற்றங்களும், மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் பல முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெற்றி அது. மக்களின் நலன்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், நமது அரசு அறம், பொருள், இன்பத்தை நோக்கமாக வைத்து 10 தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திட்டங்களை அடுத்து வருகிற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டுக்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களை வகைப்படுத்தி, அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறது.
தேசிய அளவில் பல சமூக பொருளாதார குறியீடுகளில் முன்னிலையில் திகழும் மாநிலமாக தமிழகம் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை வறுமை இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பினை வழங்கக்கூடிய மாநிலமாகவும், 2036ம் ஆண்டுக்குள்1.5 ட்ரில்லியன் (ரூ.142.6 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றுவதற்குத் தேவையான சமூக பொருளாதாரம் மற்றும் மனித வள முதலீடுகளை மேற்கொள்வதற்கு தவெக அரசு உறுதிபூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.