

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அன்சாரி : படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: “மாற்றம் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ஏமாற்றத்தை தான் தந்துள்ளனர்,” என தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் பக்ரீத் பண்டிகையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அன்சாரி கலந்து கொண்டு பெருநாள் உரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டு வரும் இந்த வேளையில், இந்தியாவின் சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் இந்த பக்ரீத் பண்டிகை மன மகிழ்வோடு கொண்டாடக்கூடாது என்ற வகையில் சங்பரிவார் இயக்கம் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் பல நாச வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
மதப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். அதேபோல் புதுச்சேரி வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தை கொண்டவர்களை நியமித்துள்ளது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் முதல்வர் விஜய் திமுகவுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்தார்.
மேலும் திமுக ஒரு தீய சக்தி, இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிறிய குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறனர் என பிரச்சாரத்தில் பேசினார். ஆனால் ஆட்சி மாறினால் காட்சி மாறும், மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் எல்லாம் ஏமாற்றமடைந்து நிற்கக் கூடிய அளவிற்கு 20 நாட்களைக் கடந்தும் கூட இதுவரைக்கும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரி செய்யப்படவில்லை.
நிறைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது. இதனால் கோவை சிறுமி படுகொலை மற்றும் தமிழகத்தில் சிறு குழந்தைகளுக்கு ஏற்படுக்கூடிய பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரும் ஜூன் 7-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்” என்றார்.
தொடர்ந்து மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தான் விஜய் ஆட்சிக்கு வந்தார். மாற்றத்தை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மாற்றம் என்பது ஏமாற்றமாக தான் மாறி கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் பாஜக குதிரை பேரங்களில் ஈடுபட்டு, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்களோ ? அதே நிலையைத்தான் நான் ஒரு தூய சக்தி, மற்ற எல்லோரும் ஊழல் சக்தி, தீய சக்தி எனக் கூறி ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று வந்த விஜய்யின் ஆட்சியிலும் அதே நிலைதான் தொடர்கிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்று வெளிப்படையாக தெரிந்த விஷயம். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்ததற்கு பின்னால் மிகப்பெரிய குதிரை பேரம் உள்ளது. இவர்கள் மாற்றத்தை தரவில்லை ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறார்கள் என மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்,” என்று அன்சாரி தெரிவித்தார்.