

சென்னை: தமிழகத்தின் மின்நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவாகி புதிய உச்சம் எட்டியது.
தமிழகத்தில் நீர்மின் உற்பத்தி,காற்றாலை மின்உற்பத்தி,சூரிய மின்சக்தி மற்றும் வெளி சந்தைகளில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து பிரிவினருக்கும், சீரான மின் விநியோகத்தை மின்வாரியம் வழங்கி வருகிறது.
பொதுவாக, கோடைக் காலங்களை பொறுத்தவரை மின்நுகர்வு 350 முதல் 370 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மாதமே 471 மில்லியன் யூனிட் வரை உயர்ந்தன. மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவழை நம்பி இருந்த சூழலில் எதிர்ப்பார்த்த அளவு பெய்யவில்லை.
இதுதவிர, எல்நினோ சூழல் உள்ளிட்டவற்றால் பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக நீடித்து வருகிறது. இதனால் மின்சார பயன்பாடு வழக்கத்தை விட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் ஜூலை மாதம் தொடக்கம் முதலே படிப்படியாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடந்த புதன்கிழமை 472.26 மில்லியன் யூனிட்களும், வியாழக்கிழமை 473.57 பதிவான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாநிலத்தின் தினசரி மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது மின்வாரியத்தின் வரலாற்றிலேயே ஜூலை மாதத்தில் பதிவான மிக உயர்ந்த தினசரி மின்நுகர்வு சாதனையாகவும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.