

அன்புமணி
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிடம் தமிழகம் தோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் அரசு மற்றும் தனியார் முதலீடுகளுக்கான உறுதிமொழிகளை ஈர்ப்பதில் முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை.
இந்தப் பட்டியலில் ஆந்திரா 25.30 சதவீத முதலீட்டு உறுதிமொழிகளுடன் முதலிடத்தைப்பிடித்துள்ள நிலையில், தமிழகம் 4.9 சதவீத முதலீட்டு உறுதிமொழிகளுடன் 6-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிடம் தமிழகம் தோல்வி அடைந்திருக்கிறது.
தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஏதேனும் நிறுவனங்கள் விரும்பினால், மொத்த முதலீட்டில் கணிசமான பகுதியை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாகத் தர வேண்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்துக்கு வர முதலீட்டாளர்கள் அஞ்சுவதற்கு இதுதான் காரணம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதலீட்டை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஈர்க்க பாமக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.