

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷில்பராமம் வளாகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில், மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சென்னை: தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், தெங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாபெரும் கைவினை பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் மதன்ராஜா தொடங்கி வைத்தார்.
ஹைதராபாத்தில் உள்ள ஷில்பராமம் வளாகத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில் “மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை” குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா தொடங்கி வைத்தார். செப்டம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 கைவினைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்களான வெண்கலச் சிலைகள், பித்தளை பாரம்பரிய விளக்குகள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், பித்தளை கலைப்பொருட்கள், களிமண் மற்றும் சுடுமண் பொருட்கள், பிரம்பு மரச்சாமான்கள், வாழைநார் பொருட்கள், சணல் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், ஆபரணங்கள், ஊதுபத்தி மற்றும் நறுமணப் பொருட்கள், கைவினைத் துணிகள் மற்றும் கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
கைவினைக் கலைஞர்கள் தங்களது தயாரிப்புகளை கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் கைவினைக் கலைஞர்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்புகள் கிடைப்பதுடன், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த கண்காட்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.