

சென்னை/புதுடெல்லி: தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்களை வெட்டக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த கே. சூர்ய பிரசாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பக்ரீத் பண்டிகை மே 28 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த ஆண்டும் கோவையில் துடியலூர் சந்தை, உக்கடம், ரத்தினபுரி மசூதி, செல்வபுரம், குனியமுத்தூர், போத்தனூர் போன்ற பல்வேறு இடங்களில் மாடுகள் வெட்டப்படவுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது. இதற்கு தடை விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு கடந்த மே 27 அன்று, “தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட எந்தவொரு விலங்கினங்களையும் வெட்ட தடை விதித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தாண்டி தனது வரம்பை மீறி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இஸ்லாம் மதத்தில் பசுக்களை பலியிடுவது அத்தியாவசியமான மத சடங்கா இல்லையா என்பது குறித்தும் தேவையற்ற கருத்தை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கில் எழுப்பப்படாத விசயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 1976-ல் பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காக பசுவதை தடை செய்யப்பட்டது. அன்றைய அரசாணையை தற்போதைய சூழலுக்கு பொருத்திப் பார்க்க முடியாது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தனர். மேலும் எதிர்மனுதாரரான சூர்யபிரசாந்த் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.