

புதுடெல்லி: பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரும் விவகாரத்தில் அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்யும் மனுவை 3 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க உரிமையியல் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான கடிதத்தை அன்புமணி முகவரிக்கு கடந்த 2025 ஜூலை மாதம் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்யவும், தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை தனது முகவரிக்கு அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டியதுடன், உள்கட்சி பிரச்சினை தீரும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும், உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் கூறி ராமதாஸ் மனுவை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராமதாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்ய பக்சி, வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறும்போது, “இந்த விவகாரத்தில் ராமதாஸையோ, அன்புமணி ராமதாஸையோ பாமகவின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது” என்று வாதிட்டார்.
நீதிபதி ஜோய்மால்யா பக்சி கூறும்போது, “அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குள் உருவாகும் உள்கட்சி பூசலுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் தீர்வு காண முடியும். அங்கீகாரமற்ற கட்சிக்குள் உருவாகியுள்ள கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்பது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.
அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா கூறும்போது, ” சின்னம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றுள்ளார். மனுதாரர் ராமதாஸ் தரப்பில் சின்னம் தொடர்பாக எவ்வித தடை உத்தரவையும் பெறவில்லை. உரிமையியல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின்படியே ஆணையம் நடந்து கொள்ளும்” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாரர் ராமதாஸ் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய மனுவை உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்யலாம். புதிய மனுவை பிப்ரவரி 24-ம் தேதிக்குள் அவர் தாக்கல் செய்யும்போது, அந்த மனு மீது 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.