

சென்னை: பிரசவ காலத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த 156 கிலோ எடை கொண்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது: சென்னையை சேர்ந்த 36 வயது பெண் விஜயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
செயற்கை கருத்தரிப்பு முறையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவுற்றார். 156 கிலோ எடை கொண்ட அந்த பெண் பிரசவக்காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதால், சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சுவாச தொற்று, பேறு கால உயர் ரத்த அழுத்தம், பேறு கால சர்க்கரை நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகிய பாதிப்புகள் அந்த பெண்ணுக்கு இருந்தன. முக்கியமாக, படுத்து தூங்கும் போது சுவாசிக்க முடியாத நிலை இருந்ததால், உட்கார்ந்தபடியே தூங்க வேண்டிய நிலை இருந்துள்ளது.
மேலும், மூளையில் ரத்த உறைவு மற்றும் தைராய்டு சுரப்பி குறைபாடுகள், அந்த பெண்ணுக்கு இருந்தது. இது பேறு கால அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி உயர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மருத்துவமனையின் பல்துறை மேலாண்மை குழுவினர் தீவிர சிகிச்சையும், தொடர் கண்காணிப்பும் அளித்தனர். அந்த காலகட்டத்தில் அந்த பெண்ணின் கர்ப்ப காலம் 32 வாரங்கள் மட்டுமே நிறைவடைந்திருந்தது. தொடர் சிகிச்சையின் காரணமாக அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது. நவம்பர் 19-ம் தேதி சிசேரியன் மூலம் பிரசவம் நடைபெற்றது.
மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையின் போது அந்த பெண்ணை முழுமையாக படுக்க வைக்கவோ, மயக்க மருந்து செலுத்தவோ முடியவில்லை. அந்த சவாலை சாதுரியமாக கையாண்ட மருத்துவர்கள், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
இதன் பலனாக அந்த பெண்ணுக்கு 2 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டதால், பூரண நலமடைந்த அந்த பெண் குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். சிக்கலான பாதிப்புடன், அதீத உடல் பருமனுடன் வந்த கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் மருத்துவர்கள் காப்பாற்றினர். இது அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவையில் ஒரு மைல் கல் ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.