

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் விடுப்பு கேட்க வந்த இலங்கைத் தமிழரை, தனித்துணை ஆட்சியர் கலைமன்னன் தகாத வார்த்தைகளால் திட்டியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அவரை அப்பணியிலிருந்து விடுவித்து ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
இலங்கை தமிழர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கின்றனர். இங்குள்ள இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க செல்லவும், மருத்துவ சிகிச்சைகளுக்கு வெளியே செல்லும்போதும் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.
இந்நிலையில், மண்டபம் முகாமில் தங்கியுள்ள ஜெகன்நாதன் (50) மருத்துவ சிகிச்சைக்கு சென்னை செல்வதற்காக, முகாம் தனித்துணை ஆட்சியர் கலைமன்னனிடம் ஒரு வாரத்துக்கு முன்பு விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஜெகன்நாதனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து வந்ததால், நேற்று (செப்.10) மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து அவர் கேட்கச் சென்றார். அப்போது தனித்துணை ஆட்சியர் கலைமன்னன், ஜெகன்நாதனை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன், தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை அப்பணியிலிருந்து விடுவித்து இன்று உத்தரவிட்டார்.