

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை: கடந்த காலங்களில் நேர்மையான அதிகாரிகளுக்கு சில தடைகள் இருந்தன, அவர்களது கைகள் கட்டப்பட்டிருந்ததாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடந்த திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்து துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தலைமை வகித்தார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசும்போது, ‘தமிழக முதல்வர் விஜய், கடந்த கால ஆட்சிகளைப் போல் அல்லாமல் சிறப்பான நேர்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என நினைக்கிறார். அதற்கு அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம். பல துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடையும் வகையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதை பாதுகாக்கவும், அதுபோன்று சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கலாம்’ என்றார்.
பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசும்போது, ‘கடந்த காலங்களில் நேர்மையான அதிகாரிகளுக்கு சில தடைகள் இருந்தன. அவர்களது கைகள் கட்டப்பட்டிருந்தன, கை விலங்கு போடப்பட்டிருந்தன. தற்போது அந்தச் சூழல் இல்லை.
தமிழக முதல்வர் விஜய் நேர்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்த விரும்புகிறார். அந்த வகையில் நேர்மையான அதிகாரிகளுக்கு தவெக ஆட்சி ஒரு பொற்காலம். எனவே, நேர்மையான அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு, அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்’ என்றார். திமுக ஆட்சிக் காலத்தின்போது முன்னாள் முதல்வர்மு.க.ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சு.வெங்கடேசன் தற்போது திமுக மீது கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.