

காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ- ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நீண்டகாலமாக போராடி வந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஜன.3-ம் தேதி அறிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் அதற்காக முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்கப்போவதில்லை என 18-க்கும் மேற்பட்ட ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆக்டோ- ஜியோ என்ற புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தின.
இந்த கூட்டமைப்பு சார்பில் மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம், சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைவது, அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது, தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய முறைகளை நீக்குவது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதற்காக பிப்.3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆக்டோ-ஜியோ மாநிலத் தலைமை அமைப்பாளர் இரா.பாலசுப் பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, ஆக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அறிவித்தபடி நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டமைப்பின் மாநில இணை அமைப்பாளர் மு.அமுதா தலைமையில் நடந்த போராட்டத்தில் சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.