

சென்னை: பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் புழக்கத்துக்கு தமிழக அரசே காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார், அண்ணாமலை, அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காரணம் தமிழக அரசு தான் என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது.
இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. ஆனால், இதைப்பற்றி சிறிதும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு. கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதன் மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழகத்தின் எதிர்காலத்துக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: அப்பா என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் ஸ்டாலின், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம். பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்.
தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத் துக்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்?
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
பிறகு எப்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். 16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிய திமுக அரசின் காவல்துறையால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்கள் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வரும் அளவுக்கான சூழல் உருவாகியுள்ளது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கும் அடிப்படை காரணமாக திகழும் கஞ்சாஉள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை மென்மேலும் ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?