

சென்னை: ‘தமிழக அரசின் நிதிநிலையை சரிசெய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பாக நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசின் நிதிநிலைமை மிகவும் இக்கட்டான நிலையில்தான் இருந்தது.
நிதிநிலையை சரிப்படுத்த வருவாய் ஆதாரங்களை பெருக்குவது, செலவினங்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நிதி நிலைமையை ஒரே ஆண்டில் சீர்செய்துவிட முடியாது. குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது ஆகும். அவசரப்பட்டு பெரிய அளவிலான செலவு களை குறைத்தால், அரசின் அடிப்படை பணிகள் பாதிக்கப்படும்.
மத்திய அரசிடமிருந்து ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. டாஸ்மாக் கடைகள் வாயிலாக ரூ.1,500 கோடி வந்தது.
பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு முத்திரைத்தாள் வருவாயை அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வணிகவரித்துறை வருவாயிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஜிஎஸ்டி நடவடிக்கையால் ரூ.4,500 கோடி கூடுதலாக கிடைக்கும் என நம்புகிறோம். பத்திரப்பதிவுத் துறையில்தான் கட்டணங்களை உயர்த்தி வருவாயைப் பெருக்கும் வாய்ப்பு உள்ளது.
நமது மொத்த பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடி. இது மாநில ஜிடிபியில் 3 சதவீதத்துக்கும் குறைவுதான். அது கடன் வரம்புக்குள்தான் உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி. கடன் அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டேதான் போகும். கடந்த ஆண்டு கடன் அளவு, வருவாயை விட 3.4 மடங்காக இருந்தது. இந்த ஆண்டு அது 3.17 மடங்காக குறையும். செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.55 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 3 மாதங்களில் சுமார் 21 ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டுடன் அடுத்த காலாண்டை ஒப்பிடக் கூடாது. ஒட்டுமொத்தமாக இந்த நிதி ஆண்டில் ரூ.1.22 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.