

சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதித் தேர்வு (டெட்) முடிவுகளை வெளியிட கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து ஆண்டுகளில் பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 55-ல் இருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45-ல் இருந்து 40 சதவீதமாகவும் குறைத்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.
இதேபோல் பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60-ல் இருந்து 50 சதவீதமாக குறைக்க கோரி பொதுப்பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், பிஹாரில் பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும் பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண்களைக் குறைக்க உத்தரவிட வேண்டும்.
பொதுப்பிரிவினர்
ஏற்கெனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவு ஆசிரியர்களுக்கு 50 சதவீத மதிபெண்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையி்ல், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பிரிவு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ள நீதிபதி, அதுவரை சிறப்பு தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.