

நிதியமைச்சர் மரிய வில்சன்
புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை வரும் 18-ம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக தொடரப்பட்ட புகாரில் நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-ல் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவர் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-ல் நடந்த இவ்வழக்கை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2-ல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கு விசாரணை நீதித்துறை நடுவர் சந்திரசேகர் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. லாஸ்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு எதிரான சட்டப்பிரிவுகளில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தரப்பில் மனுத் தாக்கலும், அரசு தரப்பில் பதில் மனுவும் ஏற்கெனவே தாக்கலாகியுள்ளது. இம்மனு மீதான விசாரணைக்கு அவகாசம் கோரியதால் 21-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-ல் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும். வேறு நீதிமன்றங்களில் நடத்த முடியாது அதனால் இங்கு நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். அதனால் இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், இவ்வழக்கை வரும் 18-ம்தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்தார். அன்றைய தினம் இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்பாக வருகிறது.