மதுரை: தமிழகத்தில் மாநகர காவல் ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு நிர்வாக நீதிபதிகளுக்கான அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத்தடை விதித்தது.
மதுரை கோ.புதூரைச் சேர்ந்த நல்லதம்பி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்கு நிர்வாக நீதிபதிகளுக்கான அதிகாரம் வழங்கி தமிழக உள்துறைச் செயலர் கடந்தாண்டு அரசாணை பிறப்பித்திருந்தார்.
காவல் துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நீதிபதிகளுக்கான அதிகாரம் வழங்குவது சட்ட விரோதம். குறிப்பாக ஜாமீன் பத்திர விதிமீறலில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதித் துறையைச் சேர்ந்தது. அந்த அதிகாரத்தை காவல் துறை அதிகாரிகளுக்கு தருவது ஏற்புடையது அல்ல.
எனவே, மாநகர காவல் ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு நிர்வாக நீதிபதிகளுக்கான அதிகாரங்களை வழங்கும் அரசாணையை செல்லாது என அறிவித்தும், அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், ஏற்கெனவே இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தற்போது மீண்டும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு நிர்வாக நீதிபதிக்கான அதிகாரம் வழங்க வேண்டிய அவசியம் என்ன, ஒருவருக்கு தண்டனை வழங்குவது நீதித்துறை நீதிபதிகளின் அதிகாரம்.
நீதித்துறை அல்லது நீதித்துறை சார்ந்த பணிகளை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ள முடியாது. இத்தகைய அதிகாரம் வழங்கல் அதிகாரப் பிரிவினை கோட்பாட்டை மீறுவதாகும்.
பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 15-ன் கீழ் நிர்வாக நீதிபதிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நியமிக்க முடியும். நிர்வாக ஆணைகள் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு அத்தகைய அதிகாரங்களை காலவரையின்றி வழங்க முடியாது.
இதனால், அரசாணைக்கு தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.