

அதிமுக, பாஜக கூட்டணி வலுவடைந்துள்ளதால் முதல்வர் ஸ்டாலின் பதற்றமாகி உள்ளார் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘தமிழகத்தின் வளர்ச்சி வரலாற்றை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், ‘வாட்ஸ் அப்’-பில் பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் உட்பட திமுக மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட் தான்’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு முதல்வர்களாக இருந்த பலரும் பங்களித்துள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெரும் பங்களித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே, துறைமுகம், விமான நிலைய மேம்பாடுகள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். இவற்றையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் மறைக்க நினைக்கலாம்.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். தேவையற்ற வதந்திகளை முதல்வர் பரப்ப வேண்டாம். அதிமுக, பாஜக கூட்டணி வலுவடைந்துள்ளதால் ஏற்பட்ட பதற்றத்தில் அதிமுக, பாஜக கூட்டணி மீது வீண்பழி சுமத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.