

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
ராமேசுவரம்: கச்சத்தீவில் பிப். 27, 28-ம் தேதிகளில் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா 4,000 பேர் என மொத்தம் 8,000 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப். 27, 28-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் மற்றும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொணடனர்.
பிப். 27-ம் தேதி மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நடைபெறுகிறது.
கூட்டுப் பிரார்த்தனை... பிப். 28-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று விழா நிறைவடையும். இந்த விழாவில், இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா 4,000 பேர் என மொத்தம் 8,000 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.