

சென்னை: கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பில் (ஐஎஸ்ஆர்எஸ்) உலகம் முழுவதும் 90 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஆர்எஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் அகர்வால்ஸ் மருத்துவ குழுமத்தின் தலைவர் மருத்துவர் அமர் அகர்வால் ஏற்கெனவே இருந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது இந்த கவுரவம், மருத்துவர் சூசன் ஜேக்கப்புக்கு கிடைத்துள்ளது.
பார்வைக் குறைபாடுகளை சீராக்குவதற்கான உயர் நுட்ப அறுவை சிகிச்சைகளை மேம்படுத்தும் அமைப்பான ஐஎஸ்ஆர்எஸ், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நவீன சிகிச்சை முறைகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது.
அதன் நிர்வாக பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், கருவிழி ஒளி விலகலை சரிசெய்வதற்கான (ரிஃப்ராக்டிவ்) அறுவை சிகிச்சை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவத்துடன் 25 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டிருக்கும் மருத்துவர் சூசன் ஜேக்கப், ஐஎஸ்ஆர்எஸ் அமைப்பின் தலைமை பொறுப்புக்கு தேர்வாகியுள்ளார்.
கண் முன்புற திசு வீக்க பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுணரான மருத்துவர் சூசன் ஜேக்கப், உலக அளவில் முதன்மையான 10 கண் மருத்துவர்களில் ஒருவராக பலமுறை தேர்வாகியுள்ளார். சர்வதேச விருதுகளையும் மருத்துவர் சூசன் ஜேக்கப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.