

ராமேசுவரம்: தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகில் சென்ற 6 அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 320-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த 6 பேர் இலங்கை செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் சென்று 7-வது மணல் திட்டில் இறங்கி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது 6 பேரையும் மீட்டு தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் 6 பேரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியின்போது தமிழகம் வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சசிக்குமார், கலைச்செல்வி, ரஜிதன், அபிஷேக்ஸ்வரன், ஸ்லியா, அக்கினேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே படகில் செல்ல உதவியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.