“மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்...” - செந்தில் பாலாஜி ரியாக்‌ஷன்

“மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்...” - செந்தில் பாலாஜி ரியாக்‌ஷன்
Updated on
2 min read

சென்னை: தவெக அரசு வெளியிட்டுள்ள மின்துறை வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார். மேலும், ‘தவெக அரசு பல தகவல்களை மறைத்து, அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதியை, மின்வாரியத்துக்கு வழங்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக மின்வாரியம் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கும். சீரான மின்சாரத்துக்கு வித்திட்டவர் ஸ்டாலின்.

ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கும். அதேபோல கடந்த 5 ஆண்டுகளில் மின் தேவை அதிகரித்தது. திமுக ஆட்சியில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தித் திறன் 9,032 மெகாவாட் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021-ல் திமுக ஆட்சிக்கு வரும்போதே மின்சார வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. மின் துறையில் வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி வட்டி கட்டியுள்ளோம். அந்த தகவலை வெள்ளை அறிக்கையில் ஏன் வெளியிடவில்லை? மக்களிடம் உண்மையை மறைத்தது ஏன்? வருவாய் பற்றாக்குறையை ரூ.34,000 கோடியாக குறைத்துள்ளோம்.

மின்வாரியத்தில் மின்சார கொள்முதல் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்துள்ளதை, தங்களுக்கு வசதியாக தவெக அரசு வெள்ளை அறிக்கையில் மறைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை கணிசமாக உயர்கிறது. இதனால் கொள்முதல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் செலவு ஏற்பட்டது. இதை ஏன் வெள்ளை அறிக்கையில் சொல்லவில்லை?

பல தகவல்களை மறைத்து, அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் நடந்த திட்டங்களை வெள்ளை அறிக்கையில் பட்டியலிட்டு பேசியுள்ளனர். மின் தேவைக்கு ஏற்ப மின்சார கொள்முதல் மற்றும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் நேற்று 401 பணி ஆணைகளை வழங்கினார். அவர்கள் எல்லோருமே திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். ஏதோ இந்த 40 நாளில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவித்து, தேர்வு செய்யப்பட்டது போல ‘வெளிப்படையாக தேர்வு நடந்தது’ என சொல்கிறார்கள். இதுகூட தெரியாமல் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகிறார்.

யதார்த்த நிலையை முதலில் அவர் உணர வேண்டும். மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாததுபோல அமைச்சர் பேசுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறாமல் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தவெக ஆட்சி செய்துவருகிறது. திமுக ஆட்சியில் செய்த பல பணி நியமனங்கள் மீதம் இருக்கிறது. அதையும் நீங்கள் தான் செய்தீர்கள் என ரீல்ஸ் மட்டும் போடாதீர்கள்.

திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் வட சென்னை எண்ணூர் அனல் மின் நிலையம், உடன்குடி அனல் மின் நிலையம், குண்டாறு அனல் மின் நிலையம், கொல்லிமலை அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. மேலும் சில திட்டங்கள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. தூத்துக்குடி அனல் மின் நிலையத் திட்டமும் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதோடு, 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின்நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சிலவற்றுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தேர்தல் அறிவிப்பால் மேற்கொள்ள முடியவில்லை.

குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள். ஆதாரம் இல்லையென்றால் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாதீர்கள். மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்படவில்லை என வெள்ளை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கோடைக்காலமான 2-3 மாதங்கள்தான் மின்சார தேவை மிக அதிகமாக இருக்கும்; அதற்கு குறுகிய கால ஒப்பந்தங்கள்தான் சரி, நீண்ட கால ஒப்பந்தம் செய்வோம் என அமைச்சர் கூறியது ஏன்?

இந்த முறை மின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சொன்னார். அதோடு மின்வாரியத்துக்கு இழப்பும் ஏற்படாது என அடித்து விட்டார். அது எப்படி?

அரசின் நிதியை கொடுத்து, முன்னாள் முதல்வர் மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சூழ்நிலையை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். ஆண்டுவாரியாக, செலவீனங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு புரியும். அரசியல் காழ்ப்புணர்சியால், குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று செந்தில் பாலாஜி கூறினார்.

முன்னதாக, “தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தற்போது ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை” என்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

“மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்...” - செந்தில் பாலாஜி ரியாக்‌ஷன்
ரூ.2.47 லட்சம் கோடி கடனில் மின் வாரியம் - வெள்ளை அறிக்கை வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in