

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனங்கள் வழங்கப்பட்டதாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்காக கோப்புக்கு எடுத்துள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் கூடுதல் குற்றப்பத்திரிகையை முதன்மை அமர்வு நீதிமன்றம் கோப்புக்கு எடுத்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.