அசோக்குமார்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், தனக்கு எதிராகப் பிறப்பித்த ‘லுக் அவுட்’ நோட்டீஸை திரும்பப்பெறக் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக வேலைக்குப் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து அசோக்குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில், இதை திரும்பப்பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் தரப்பில், “அமலாக்கத் துறையின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருந்த போது பிறப்பிக்கப்பட்ட ‘லுக்அவுட்’ நோட்டீஸ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ‘லுக் அவுட்’ நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும்’’ என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், எதற்காக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
“வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 9 முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை” என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘லுக் அவுட்’ நோட்டீஸ் இன்னும் நீடிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அசோக்குமாரின் மனுவுக்கு பதிலளிக்க, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.