தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு: முன்ஜாமீன் கோரி அசோக்குமார் மனு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு: முன்ஜாமீன் கோரி அசோக்குமார் மனு
Updated on
1 min read

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி குதிரை பேரம் நடத்தியதாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கோரிய மனுவுக்கு காவல் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகவும், அந்த தீர்மானத்தின்போது ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ.35 கோடி வரை பணம் கொடுப்பதாக தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபரான திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் ‘சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏவை தொடர்புகொண்டு பேரம் பேசியதாகவோ, மிரட்டியதாகவோ எனக்கு எதிராக எஃப்ஐஆரில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “இந்த வழக்கில் மிக தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டுமென்பதால் விசாரணையை திங்கள்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்” என்றார்.

அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அதுவரை கைது நடவடிக்கையில் போலீஸார் ஈடுபடக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 6-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) தள்ளிவைத்துள்ளார்.

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு: முன்ஜாமீன் கோரி அசோக்குமார் மனு
மறைந்த டியோகோ ஜோட்டாவுக்கு வெற்றியை சமர்ப்பித்த போர்ச்சுகல் அணியினர் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in