

கோவை: “வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சரித்திர வெற்றியை தவெக பெற்றுள்ளது” என்று செங்கோட்டையன் பெருமிதமாக தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கோபி தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் கூறியது: “ஓர் இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தியாகத்தால் வளர்ந்த இயக்கம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.
மக்கள் சக்தியாக தற்போது தவெக மாறியிருக்கிறது. வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமல் முதல் தேர்தலில் சரித்திர வெற்றி பெற்றுள்ளோம். விஜய்யை மக்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கின்ற மக்களுக்கு அவர் உறுதுணையாக இருப்பார். உறுதியாக உயரிய பார்வை, மனிதநேயம் அவரிடத்தில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கூறினார்.