

சென்னை: “பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் பயம் வந்துவிட்டது. தமிழகத்துக்கு அடிக்கடி சென்று ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என முயற்சிக்கிறார்கள்” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையம் யாரால் இயக்கப்படுகிறது என தெரியும். பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை தேர்தல் ஆணையம் செய்யும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பில்லை. இதைத்தான் பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பார்த்தோம்.
தேர்தல் ஆணையம் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும். இதைத்தான் நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இப்படி இயங்கி வந்தால், நாட்டு மக்களின் நம்பிக்கை போய்விடும்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை 22-ஆம் தேதி நடக்கும் என நம்புகிறோம்.
பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் பயம் வந்துவிட்டது. தமிழகத்துக்கு அடிக்கடி சென்று ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என முயற்சிக்கிறார்கள். இங்கு 400 முறை வந்தாலும் அவர்களால் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
தமிழகம் ஆர்எஸ்எஸ் - பாஜவுக்கான மண் இல்லை. இது சமூக நீதி மண். தமிழக மக்கள் புத்திசாலிகள். பாஜகவுடன் இருக்கும் அதிமுகவும் திரை மறைவில் ஒளிந்துகொண்டு, பாஜகவின் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். வாச்சாத்தி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முதலில் எடப்பாடி பழனிசாமி பேசட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.