

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மயிலாடுதுறை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள்தான் பெரியார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘பெரியாரை போற்றுவோம்’ என்ற தலைப்பில், நேற்று முன்தினம் இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று சீமான் பேசியது: நஞ்சில்லா உணவளித்த நம்மாழ்வார், நெல் ஜெயராமன், வ.உ.சி, கா.சு.பிள்ளை, முத்துராமலிங்க தேவர், அஞ்சலை அம்மாள், மொழிக்காக உயிர்நீத்த தாளமுத்து நடராஜன் உள்ளிட்டோர்தான் தமிழர்களுக்கான பெரியார்.
பட்டியலினத்தவருக்காக அனைவரையும் ஒருங்கிணைத்து போராடிவரும் விசிக தலைவர் திருமாவளவன், ஆனைமுத்து வழியில் இடஒதுக்கீட்டுக்காக போராடி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்தான் பெரியார்.
பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது திமுக. பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தபோது 5 ஆண்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கியது திமுக. திராவிடர் கழகம்போல ஆர்எஸ்எஸ் ஒரு கொள்கை இயக்கம் என்று விளக்கம் கொடுத்தது யார்?.
3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, அமலாக்கத் துறை சோதனை வந்ததும், பிரதமர் மோடியிடம் ஓடிச் சென்றவர்கள். மாற்றுக் கருத்தை கருத்தாக எதிர்கொள்கிற முதிர்ந்த பண்பு திராவிட இயக்கத்தினரிடம் இல்லை. திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் திராவிடம் என்ற குடையின் கீழ் உள்ளன.
நாம் மட்டும் தான், தமிழர் என்ற இடத்தில் இருக்கிறோம். எது தேவை என்பதை அறிவார்ந்த சமூகம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பூம்புகாரில் இளையநகுலன், மயிலாடுதுறையில் காசிராமன், சீர்காழியில் அம்பேத்ராஜன், திருவிடைமருதூரில் திவ்யபாரதி ஆகியோர் போட்டியிட உள்ளதாகக் கூறி, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மணிசெந்தில், ஆதி ரத்தினவேல் பாண்டியன், ஹுமாயூன் கபீர், கொள்கை பரப்பு செயலாளர்கள் சாட்டை துரைமுருகன், தமிழன் காளிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.