

காரைக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான்
“டோக்கன் கொடுப்பவர்களை துடைப்பம், காலணியை வைத்து அடித்திருந்தால் நாடு திருந்தியிருக்கும்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தான் போட்டியிடும் காரைக்குடியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான். அப்போது அவர் பேசியதாவது: அரசின் அமைப்பே தவறாக உள்ளது. அதை தகர்க்க வேண்டும். வாக்குக்குக்காசு கொடுப்பதை விட பெரிய அநீதி ஒன்றுமே இல்லை. நல்ல அரசு உருவாக வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருந்தும் வாக்குக்கு பணம் கொடுக்கும் அநீதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் ஜனநாயகம் செத்துப்போய் கேடுகெட்ட பணநாயகம் பிறந்து விடுகிறது. சேவை செய்ய வருபவர்கள் எதற்குக் காசு தர வேண்டும்? இந்த கேள்வி எப்போது மக்களிடம் எழப்போகிறது. கேரளாவில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக காசு கொத்ததா? தமிழகத்தில் மட்டும் ஏன் கொடுக்கின்றனர்? அந்த மாநிலத்தில் இலவசம் அறிவிக்கவில்லை ஏன்? அவனுக்கு கற்ற கல்வி பயன்படுகிறது.
எல்லா நச்சு திட்டங்களுக்கும் பெயர் வைத்தது காங்கிரஸ். அதற்கு ஊட்டம் கொடுத்து வளர்த்தது பாஜக. காங்கிரஸுடன் தவெக சேர்ந்து விடக்கூடாது என முருகனிடம் வேண்டிக் கொண்டேன். தமிழகத்தில் 0.5 சதவீதம் கூட இல்லாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாக்குகளில் தான் வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் வாக்குக் கேட்டு வரும் ராகுல் காந்தி, 28 சீட், ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்த ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறமாட்டாராம். மனம்கெட்டுப் போய் திமுக-வினர் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு வாக்களித்தால் மரபணுவைத் தான் சோதிக்க வேண்டும்.
திமுக ரூ.8,000 டோக்கன் கொடுக்கின்றனர். அந்த டோக்கனை வாங்கி ஸ்டாலினுக்கு கொடுத்து எனக்கு முதல்வர் பதவி தாருங்கள் என்று கேட்கப் போகிறேன். டோக்கன் கொடுப்பவர்களை துடைப்பம், காலணியை வைத்து அடித்திருந்தால் நாடு திருந்தியிருக்கும். திருடுவதற்குத் தான் டோக்கன் வழங்குகின்றனர். “எப்படியாவது வெற்றி பெற்று விடுங்கள் பெரியப்பா” என்று என்னிடம் குழந்தைகள் கூறுகின்றனர். சொல்லும்போது மனசு வலிக்கிறது.
மாற்றுக் கட்சியினரும் சீமான் சட்டப்பேரவையில் பேச வேண்டும் எனக் கூறுகின்றனர். சாதி, மதம் பார்ப்பவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம். சாதிப்பவன் என்று நினைத்தால் எனக்கு வாக்களியுங்கள். நான் சட்டசபையில பேச வேண்டுமா வேண்டாமா என வாக்காளர்கள் முடிவு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.