

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததால், படிக்கட்டில் பயணம் செய்த 10 மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக பணியாளான நடத்துநர் விடுவிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று காலை அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்தது. ரெங்கம்மாள் சத்திரம் நிறுத்தத்தில் பேருந்து நின்று புறப்பட்ட சிறிது நேரத்தில், மூடப்பட்டிருந்த பேருந்து கதவு திடீரென திறந்தது. இதனால், படியில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவிகள் 10 பேர் கீழே விழுந்ததை கண்டு பயணிகள் கூச்சலிட்டதால், பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
கீழே விழுந்து காயமடைந்த மாணவிகள் 10 பேரும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் உள் நோயாளிகளாகவும், 8 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றனர்.
காயமடைந்த மாணவிகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மாணவிகள் அனைவரும் நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பேருந்தில் ஏற்கெனவே 90 பயணிகள் இருந்த நிலையில், ரெங்கம்மாள் சத்திரத்தில் மேலும் 30 பேர் ஏறியதால் கூட்டம் மிதமிஞ்சி இருந்தது. இதைத் தொடர்ந்து பேருந்தின் தானியங்கி கதவை ஓட்டுநர் மூடியுள்ளார்.
அப்போது, முன்பக்க படிக்கட்டின் அருகே அவசர காலகதவைத் திறப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த பொத்தானை யாரோ அழுத்தியுள்ளனர். இதனால், கதவு திறந்ததால், படிக்கட்டில் நின்றிருந்த மாணவிகள் கீழே விழுந்து விட்டனர். எனினும், பணியில் அலட்சியமாக இருந்ததாக பேருந்து ஓட்டுநர் அர்ச்சுணன், நடத்துநர் மணிகண்டனுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
கூடுதல் பேருந்து: புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த வழித்தடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லை. எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் அர்ச்சுணனை பணியிடை நீக்கம் செய்தும், தற்காலிகப் பணியாளரான நடத்துநர் மணிகண்டனை பணியில் இருந்து விடுவித்தும் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.