

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே கைபேசி பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது.படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழகத்தில் உள்ள 52 முக்கியக் கோயில்களில் செல்போன் தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்யவும் கோயில் வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், பலர் தடையை மீறி புகைப்படம் எடுப்பது மற்றும் ‘ரீல்ஸ்’ செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், முதற்கட்டமாக 52 முதுநிலைக் கோயில்களில் இந்தத் தடை நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.
சென்னையில் புகழ்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கோயில் நுழைவு வாயில்களில் ஒலிபெருக்கி மூலம் தடை பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக கோயில் வாசல்களிலேயே அமைக்கப்பட்டிருந்த செல்போன் பாதுகாப்பு அறையில் ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை என்பதால் வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தடையை மீறி செல்போன் கொண்டு சென்ற பக்தர்களைப் பிடித்த அதிகாரிகள், முதன்முறை என்பதால் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், “முதல் நாள் என்பதால் எச்சரிக்கையுடன் விடுகிறோம். மீண்டும் தடையை மீறினால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
செல்போன் தடை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘பக்தர்கள் அமைதி யான சூழலில் இறைவனைத் தரிசிக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இறைவனின் திருவுருவங்களை வீடியோ எடுப்பதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை. எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய செல்போன்களை வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம், புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண செல்போன்களைக் கோயிலுக்குள் கொண்டு செல்லத் தடையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.