

சென்னை: ‘ஊரகப் பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்’ தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், ‘கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
> கூட்டுறவுத் துறைக்கு 8,028 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> தமிழகத்தில் நெல் உற்பத்தி குறையாமல் இருக்க 134 கோடி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
> விவசாயிகளுக்கு வழங்கும் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு 14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையில் வெளியான அறிவிப்புகள்:
> ஊரகப்பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். 30,000 பெண்கள் பயனடையும் இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> கால்நடை மருத்துவமனைகளுக்கு தேவையான 41 கட்டடங்கள் 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
> கால்நடை மருத்துவ சிகிச்சை தேவைகளை பூர்த்தி செய்ய 25 கால்நடை மருத்துவமனைகள் கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகளாகவும், 210 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாகவும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
> தமிழகத்தில் 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
> கால்நடைகளின் எதிர்பாராத இழப்பினால் விவசாயிகளுக்கு நிதிச்சுமை ஏற்படாமல் இருக்க கால்நடைகள் காப்போம் என்ற திட்டத்திற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> கால்நடைகளுக்கு தரமான தீவனம் கிடைப்பதை உறுதி செய்ய தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் 6.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
> பசுந்தீவன சாகுபடியினை ஊக்குவிக்கவும், மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்பதற்கும் 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.