

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது
படம்: எல்.சீனிவாசன்
பணி நிரந்தரம் கோரி என்எஸ்சி போஸ் சாலையில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மண்டலங்களில் தற்காலிகமாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தூய்மைப் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு பணியின் போது 3 வேளை உணவு, குடியிருப்பு வசதி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு சென்றுவிட்டனர். ஒரு பிரிவினர், பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் சாலை மறியலிலும், மெரினாவில் கடலில் இறங்கியும் போராடி வந்தனர். நேற்று அண்ணா சதுக்கம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர் பகுதியிலும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர்.
1,163 பேர் கைது: இதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டு, குறளகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் கூடினர். அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டபோது, போலீஸார் தடுத்து நிறுத்தியதால், என்எஸ்சி போஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீஸார் அவர்களை கைது செய்து, குண்டுகட்டாக தூக்கிச் சென்று பேருந்துகளில் ஏற்றி சென்றனர்.
அதனால் அந்த சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் 1,163 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் இரவு 7 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும், உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.