

சென்னை: அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மண்டலங்களில் தற்காலிகமாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு பணியின் போது 3 வேளை உணவு, குடியிருப்பு வசதி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர், தூய்மைப் பணியாளர்கள் பலர் பணிக்கு திரும்பிய நிலையில், ஒரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த பாரதி ஆகியோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், அமைச்சர், உண்ணாவிரதம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு பழச்சாறு வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
இது தொடர்பாக, உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த பாரதியிடம் கேட்டபோது, “மாநகராட்சியிலேயே பணி வழங்கப்படும். ஏற்கனவே வாங்கிய ஊதியமே வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால் போராட்டத்தை முடித்துக் கொண்டோம்” என்றார்.