

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கக் கோரி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |
சென்னை: அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கும் வரை டிச.8-ம் தேதிமுதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும், தற்காலிக பணியாளர்களுக்கு இஎஸ்ஐ மூலம் மருத்துவ வசதி, மேல்நிலைத் தொட்டி இயக்குவோருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள், பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு உட்பட அரசால் ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோஷமிட்டனர். காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
ஏஐடியுசி கண்டனம்:
இந்நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கைது செய்திருப்பதற்கு தமிழ்நாடு ஏஐடியுசி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச்செயலாளர் ம.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும், இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தொழிலாளர்களை வரும் வழியிலும் காவல் துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல். அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இருப்பது நியாயமானது அல்ல. தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.