

ஆற்காடு: ஆற்காடு அடுத்த விளப்பாக்கத்தில் தனியார் நிதி நிறுவன பங்குதாரர் வீட்டில் இருந்து ரூ.1.25 கோடியை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன பங்குதாரரான இளங்கோவன் (67) என்பவரின் வீட்டிலும், ஆனைமல்லூர் அருகே தனியார் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திலும் நேற்று முன்தினம் சென்னை வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், இளங்கோ முறையான வரி செலுத்தவில்லை என எழுந்த குற்றச்சாட்டின்படி இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதன்படி அவரதுவீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் மற்றும் முறையாக கணக்குகள் இல்லாமல் வைத்திருந்த மொத்தம் ரூ.1.25 கோடியும், முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர்.
ஆனைமல்லூர் அருகே தனியார் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
மேலும், இளங்கோவின் வீட்டில் இருந்த பணம் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக கொடுக்க வைத்திருந்தபணமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.