

படம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை தாக்கும் அலைகள்
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடியும், அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் அரிச்சல் முனை என்ற பகுதியும் உள்ளது. தனுஷ்கோடியைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளும், அரிச்சல் முனையில் புனித நீராட பக்தர்களும் இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனுஷ்கோடியில் தெற்கு மன்னார் வளைகுடா கடற்பகுதி சீற்றமாகக் காணப்படுவதால் தனுஷ்கோடி - அரிச்சல் முனை தேசிய நெடுஞ்சாலையில் கடல் அரிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு வேலி கற்கள் சாலையில் சிதறி கிடக்கின்றன. கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றினால் தனுஷ்கோடி, முகுந்த ராயர் சத்திரம், அரிச்சல் முனை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.