ரகுபதி |கோப்புப் படம்
திருநெல்வேலி: சட்டப்பேரவை கதவுகளை மூடுங்கள் என முதல்வர் கூறியது உரிமை மீறல் செயலாகும். இதை கண்டிக்கும் வகையில் கட்சி தலைமையுடன் ஆலோசித்து சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப முடிவெடுப்போம் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏவை ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில்கூட இருந்த பேச்சுரிமை விஜய் ஆட்சியில் இல்லை. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வழக்குகளை முடுக்கிவிட டிஎஸ்பிக்கள் மூலம் நீதிபதிகளுக்கே சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
தவெக அரசு முழுக்க முழுக்க பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்லாக’ இயங்குகிறது. ஜனநாயகன் திரைப்படத்தில் நான்கு அமைச்சர்கள் நடித்துள்ள சூழலில், கரூர் சம்பவத்தின்போது கண்ணீர் விடாதவர்கள் இப்போது அந்த படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளுக்கு வெளிநடப்பு செய்ய முழு உரிமை உண்டு. ஆனால், சட்டப்பேரவை கதவுகளை மூடுங்கள் என முதல்வர் கூறியது உறுப்பினர்களை சிறை வைப்பதற்கு சமமான மிகப்பெரிய ஜனநாயக உரிமை மீறலாகும். சட்டப்பேரவை தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து கட்சி தலைமையுடன் ஆலோசித்து சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்படும்.