

சென்னை: சிறப்பு ஊதிய உயர்வை முதல்வர் அறிவிக்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்துடன், ஆதார் சரிபார்ப்பு, மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு, தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இதில் அரசு திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீர்க்க வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பிஓஎஸ் கருவிகள் வழங்க வேண்டும், எடையாளர்களை நியமிக்க வேண்டும், 25 சதவீதம் சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், செப்.10-ம் தேதி வரை இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.