

ராமேசுவரம்: பாக்நீரிணை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதி, தென்தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராமேசுவரம் பாக்ஜலசந்தி கடலில் காற்றின் வேகம் 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும். எனவே மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இதனால் நாளை (புதன்கிழமை) மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது. மேலும், மீன்பிடி இறங்குதளங்களில் படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடையால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.