

ராமதாஸ்
சென்னை: “அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எதை எதையோ பேசுகின்றனர்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், பாமகவில் தந்தை - மகன் மோதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கே கட்சி, சின்னத்தை அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தே நீக்கிவிட்டோம். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டோம். அவருடன் சேர்ந்த ஒரு கூட்டம், பொய் பேசுவது, ஏளனமாகப் பேசுவது, மணம் புண்படும்படி பேசுவது எனப் பேசிவருகிறார்கள்.
அவர்கள் என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை, 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த ஜி.கே மணியை வசைபாடுவதையும் நாளும் தொழிலாக செய்து வருகிறார்கள். அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எதை எதையோ பேசுகின்றனர்.” என்று தெரிவித்தார்.