

புதுடெல்லி: நாட்டின் கடைக்கோடிப் பகுதியில் உள்ள மக்களும் ரயில் வசதிகளால் பயன்பெறும் வகையில், பல்வேறு பகுதிகளை ரயில் நெட்வொர்க்குடன் இணைக்க இந்திய ரயில்வே பணியாற்றி வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தானில் எல்லைப் பகுதி இணைப்பை அதிகரிப்பதற்காக, ரயில்வே அமைச்சகம் மொத்தம் 827 கி.மீ. நீளம் கொண்ட 3 முக்கியமான ரயில் பாதை திட்டங்களை விரைவுபடுத்தி உள்ளது. இந்த ரயில் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், அவை பிராந்திய இணைப்பை மேம்படுத்தி, உள்ளூர் மக்களுக்குப் பயனளிப்பதோடு பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இந்தப் பகுதிகள் வடமேற்கு ரயில்வே மண்டலத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
இதுகுறித்து வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அமித் சுதர்சன் கூறும்போது, ‘‘ராஜஸ்தானின் எல்லைப் பகுதிகளில் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மேற்கு ராஜஸ்தானில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த, அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் (ஏபிஎஸ்எஸ்) கீழ் ஜெய்சால்மர் மற்றும் பார்மர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
அனுப்கர் மற்றும் பிகானேரை இணைக்கும் 187 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது, இத்திட்டம் ஒப்புதல் பெறும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதுதவிர, 380 கி.மீ. நீளமுள்ள ஜெய்சால்மர் – பாபர்/பிலாடி (பார்மர் வழியாக) மற்றும் 260 கி.மீ. நீளமுள்ள கஜுவாலா – ஜெய்சால்மர் ஆகிய 2 புதிய ரயில் பாதைகளுக்கான இறுதி இருப்பிட ஆய்வு நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு, 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆதரவாக ரயில்வே அமைச்சகம் ரூ.10,228 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதலாக, ரயில் பாதை விரிவாக்கம், நிலைய மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்புகளை உள்ளடக்கிய சுமார் ரூ.90,659 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா இடையே புதிய ரயில் பாதைக்கான இறுதி இருப்பிட ஆய்வுக்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.