சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் மாநிலத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம்தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உட்கட்டமைப்பை சீரமைக்கும் வகையில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இளைஞர்களை பெருமளவில் காங்கிரஸில் சேர்க்கவும், தொண்டர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அகில இந்திய தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ஆக. 1-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சமூக நீதியை நிலைநாட்டவும், இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யவும் அவர் தொடர்ந்து போராடி வருகிறார்.
அவரது இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப்பெரிய புதிய எழுச்சியையும் உத்வேகத்தையும் தரும். 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கித் தமிழக காங்கிரஸின் பயணம் மேலும் வலுப்பெறும்” எனத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் தமிழகம் வருகை அக்கட்சி கட்சித் தொண்டர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.