

சென்னை: தகுதி நீக்க மனு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர், பேரவைத் தலைவர் முன்பு, வரும் ஜூலை 30-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. தவெக 108 இடங்களில் வென்றது. தவெக ஆட்சியமைக்கவும், 5 ஆண்டுகள் ஆட்சி தொடரவும் கூடுதலாக எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதனால் அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக கோரியது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற, முதல்வர் விஜய் கொண்டு வந்த தவெக ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சி.வி.சண்முகம் தலைமையிலான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ் உள்ளிட்ட 25 எம்எல் ஏக்கள் ஆதரித்து வாக்களித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள், நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். தனது உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கோரி பழனிசாமி தரப்பு, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தது.
இதனிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
சி.வி.சண்முகம் அணியை சேர்ந்த மற்ற 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், அவர்கள் மீதான கட்சித் தாவல் தடுப்பு சட்ட நடவடிக்கை கோரிய தகுதி நீக்க மனுவை பழனிசாமி திரும்பப் பெற்றார்.
பழனிசாமி அளித்த தகுதி நீக்க மனு அடிப்படையில், முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் கடந்த ஜூலை முதல் மற்றும் 2-ம் வாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் நேரில் அழைத்து விளக்கம் கோரினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் கூடுதல் விளக்கம் கோர விரும்புவதால், அவர்கள் வரும் ஜூலை 30-ம் தேதி பேரவைத் தலைவர் அறையில் நேரில் விளக்கம் அளிப்பதற்காக வர வேண்டும் என சட்டப்பேரவை செயலர் இரா.சாந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அப்போது, பழனிசாமியும் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேரவைச் செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.