

புதுச்சேரி: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை கூடி, சபை நடவடிக்கைகள் தொடங்கியுவுடன் பேரவைத் தலைவர் அன்பழகன், நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏராளமான மக்கள் இறந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். இந்திய நாட்டைச் சேர்ந்த 150 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.
இன்னும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உறுதுணையாக இருப்போம் என பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகமும் ஈடுபட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேபாள வெள்ளத்தில் இறந்தவர்களுக்க புதுச்சேரி சட்டப்பேரவை சார்பில் இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வோம் எனக் கூறி உறுப்பினர்களை அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.