

செங்கல்பட்டு: கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்றும் பராமரிப்பு வழங்கியதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை வடபழனியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.65 லட்சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.
கூடுதல் தொகை வசூல்
சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.
சிகிச்சை பலனின்றி பிப். 9-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சுசிலா உயிரிழந்தார். ஆனால் காலை 10.30 மணிவரை உடலை ஒப்படைக்காத மருத்துவமனை நிர்வாகம், அந்த இடைப்பட்ட நேரத்தில் உணவு மற்றும் பராமரிப்பு வழங்கியதாகக் கூறி கூடுதலாக வசூலித்ததாக புகார் எழுந்தது.
மருத்துவமனை ஒப்புதல்
இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில், ‘ரூ.61,644 கூடுதலாக வசூலித்திருப்பதாக மருத்துவமனை தரப்பே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு, அந்தத் தொகையை திருப்பிச் செலுத்துவதாக தெரிவித்தும் இதுவரை வழங்கவில்லை’ எனக் கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் காசி பாண்டியன், மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதித்ததுடன், கூடுதலாக வசூலித்த ரூ.61,644-ஐ மனுதாரருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.