

புது டெல்லி: மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலான தனது பேச்சின்போது, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் சமீபத்திய சூழல் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்தினேன். இந்த போரினை முன்கூட்டியே நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினார். மேலும், வளைகுடா நாட்டின் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து, இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று கூறினார்.
இஸ்ரேலின் மத்திய நகரமான பெய்ட் ஷெமேஷில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். இது போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும்.
சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கின. இத்தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.