

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் உரையில் தனிக் கட்சியை பற்றியும், தனித் தலைவர்களை பற்றியும் துதிப் பாடல்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
பேரவைத் தலைவர் கூட, ‘இது ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம், அதைப்பற்றி மட்டும் பேசுங்கள்’ என பல முறை கூறியும், தனிமனித துதிப் பாடல்களும், தனிக்கட்சி துதிப் பாடல்களும்தான் பேசப்படுகின்றன. இது கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
தலைவர்கள் துதிப் பாடல் பற்றி பேசினால், நாங்கள் கூட எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். தமிழகத்தில் சாதி, மத, இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இவ்வாறு ஒவ்வொரு கட்சியும், அவரவர் தலைவர்களின் பெருமைகளை பேசுவதற்காக சட்டப்பேரவையை பயன்படுத்தினால் அது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்காது.
சட்டப்பேரவையைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும். அதேபோல் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை கொடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் பாதியிலேயே துண்டித்து விட்டதாகத் தெரிகிறது.
பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் நேரடியாக பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். அதில் என்ன தவறு? சட்டப்பேரவையே மக்கள் வரிப்பணத்தில் தானே நடக்கிறது. இது தொடர்பாக பேரவை தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.