“ஊராட்சி மன்ற செயலர்களை பணி நிரந்தரம் செய்யாதது அநீதி” - பிரேமலதா
சென்னை: ‘ஊராட்சி மன்ற செயலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாதது அநீதி’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலர்கள், உதவியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட செயலர்களுக்கு இதுவரை முறையான ஊதிய உயர்வும், வழக்கமான பணியுரிமைகளும் வழங்கப்படாமல், தொடர்ந்து தற்காலிக பணியாளர்களாகவே வைத்திருப்பது அநீதியாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செயலர்களை மிரட்டும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்வதும் கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் உரிய ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். போராட்ட காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும், சம்பளத் தடைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
