

“தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் அண்ணன் ஸ்டாலின் மேல இருக்கு. அதையும் இந்தப் பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கிறது” என முதல்வர் ஸ்டாலின் முன்பு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது: இன்று தான் முதல்வர் ஸ்டாலினுடன் நடைபயிற்சியில் நானும் நடந்தேன். இதில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு அளிக்கும் மரியாதையும், பாதுகாப்பையும் நான் நடந்து செல்லும் போது நேரில் பார்த்து உணர்ந்தேன்.
மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி என்ற நிலையே இல்லாத அளவுக்கு சாதனை படைக்கும். இந்த தேர்தலில் ஒட்டுமொத்த தாய்க்குலங்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.
திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கட்சிகளையும் கூட்டணியில் பொறுமை காத்து அவர்களுக்கு தேவையான மரியாதையை கொடுத்து, ஒரு கூட்டு குடும்பமாய் இத்தேர்தலில் பாதுகாத்து உள்ளார். ஆனால், அதிமுக-வை விட்டு ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் வெளியேறி உள்ளனர். இதன் மூலம் தலைமை பண்பும், மாண்பும் அதிமுக -விடம் இல்லை என்பது தெளிவாகிறது.
தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. சம உரிமை வழங்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் அண்ணன் ஸ்டாலின் மேல இருக்கு. அதையும் இந்தப் பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கிறது.
இதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? வேறெதுவும் இந்த ஆட்சிக்கு எதிராகச் சொல்ல முடியாது. நான் சொல்கிறேன், அப்படி ஏதாவது ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் நான் அண்ணனிடம் உரிமையோடு எடுத்துச் சொல்வேன். நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான நிலையை அண்ணன் உருவாக்குவார் என்பதில் யாருக்கும் மாற்றுத் கருத்துத் தேவையில்லை.
சினிமா காட்சி போல கையை அசைத்தால் வாக்கு வங்கி வந்துவிடும் என்பதல்ல அரசியல். லாலிபாப் சாப்பிடும் சின்னப் பையன் அரசியலில் கதாநாயகனாக மாறிவிட முடியாது. 75 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்து நிற்கும் திமுக, மக்களுக்கான சேவையை நன்கு உணர்ந்து செயலாற்றி வருகிறது. மக்களோடு மக்களாக நின்று அரசியல் செய்வதுதான் தலைமைக்கான பண்பு.
எனவே, மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து நாளை நமதே என்பதை நிரூபிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.