

பிரேமலதா
சென்னை: “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களையும் பராமரித்து, தனியார் நிறுவனத்துக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து மாணவர்களும் விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும். நானும் ஒரு நேஷனல் அத்லெட் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
இளைஞர்களை ஒழுங்குப்படுத்த விளையாட்டுத் துறை மிக முக்கியம். அமுதன், தனுஷ் கொலைக்கு பின்னால் இருப்பது மதுவும், கஞ்சாவும்தான். நிச்சயம் இதை ஒழிக்க வேண்டும்.
சாலைகள் மோசமாக உள்ளன. இயக்கத்தில் உள்ள பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமைக்கு என்னதான் தீர்வு? 4 நாட்களில் 10 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அனைவரது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இதை சட்டப் பேரவையிலும் பதிய வைத்திருக்கிறேன்.
தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். அரபு நாடுகளில் உள்ளது போல கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒரு சிறு குழந்தையை பாலியல் வன்கொடுகை செய்ய வேண்டும் என தோன்றுகிறது என்றால், உங்களை என்கவுன்ட்டர் செய்வதில் என்ன தவறு? அரபு நாட்டில் ஒரு பெண்னை கண்களுக்கு நேராக பார்க்க கூட அச்சப்படுவார்கள். அங்குள்ள சட்டவிதிகள்தான் இதற்கு காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.